நூல் : மாதொருபாகன்
ஆசிரியர் : பெருமாள் முருகன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கம் : 190
கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளை இச்சமூகம் எப்படிக் கேள்விக்குள்ளாக்குகிறது, அந்தக் கணவன் மனைவியின் நிலை என்ன, அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள், எப்படி இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பன போன்ற உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது இப்புதினம். சலிப்பை ஏற்படுத்தாத நடை பக்கங்களை வேகமாக நகர்த்த உதவியது. இவருடைய அனைத்துப் புத்தகங்களையும் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்த இப்புதினம் தவறவில்லை குறிப்பாக பாலியல் சார்ந்த உணர்வுகளை அடையாளப்படுத்துவதே இப்புதினத்தின் முக்கிய நோக்கம்.
குடும்பம் என்னும் அமைப்பு உருவாக்கும் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து, குடும்பத்தின் மூலம் ஏற்படும் சுதந்திரமற்ற தன்மையை, பிள்ளைகளை வளர்த்து அதன் மூலம் நிகழும் சுரண்டல்களை ஆங்காங்கே சொல்லிச் செல்லும் கதாநாயகனின் சித்தப்பா தான் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். அவர் பேசும் வசனங்கள் எல்லாம் அதிரடி.
பாலியல் சார்ந்த எண்ணங்களை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று இயற்கையான பாலியல் உணர்வுகள் (இங்கு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சட்டதிட்டங்கள் இல்லை). இரண்டு பண்பாடு ரீதியிலான பாலியல் வெளிப்பாடுகள் (இவை ஒழுக்கம் சார்ந்தவை). நாம் நாகரீகமான சமுதாயத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் ஒழுக்கம் சார்ந்த பாலியல் உணர்வுகளை முதன்மைப்படுத்துகிறோம். இதுவே நடைமுறை சாத்தியமும் கூட. ஆனால் இயற்கையான பாலியல் உணர்வுகள் அழிந்து போவதில்லை. ஆழ் மனதிலேயே இருக்கின்றன. இந்த உணர்வுகள் பொது வெளிகளில் விவாதிக்கப்படாதவை. அதுவும் ஒரு பெண்ணின் பாலியல் உணர்வுகள் எந்த இடங்களிலும் பேசப்படுவதில்லை. அப்படியே ஒரு புத்தகம், ஒரு திரைப்படம் பேசினாலும் அந்தப் பெண் அங்கு கதாநாயகி என்ற இடத்தில் இருக்கமாட்டாள். இப்புதினம் இரண்டுவிதமான பாலியல் உணர்வுகளையும் பேசியுள்ளது பாராட்டுதலுக்குரியது.