கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

image

💫கூட்டம் என்றாலே கொஞ்சம் பயமும் பதட்டமும் கூடவே வந்துவிடும். அதுவும் அங்கே எல்லோர் முன்னிலையிலும் 10 நிமிடங்கள் பேசியாக வேண்டும் என்றால் இதை விட பெரிய சங்கடமான தருணம் ஒரு Introvert-க்கு அமைய முடியாது. ஆனால் இவ்வளவு மனத்தடைகளையும் மீறி அங்கு சென்றதில் நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது….நட்பு கிடைத்தது… பாராட்டுக்கள் கிடைத்தன…. மகிழ்வான மறக்கமுடியாத தருணம் கிடைத்தது.

💫எதனால், எப்படி கவிதை எழுத ஆரம்பித்தேன், இளம் எழுத்தாளர்களுக்கு/படைப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன – என்பதைப் பற்றி மிகவும் சுருக்கமான முறையில் பேசியிருந்தேன்.

💫தான் ஒரு எழுத்தாளர்/கவிஞர் எனத் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொள்வதில் இளம் எழுத்தாளர்களுக்கு உள்ள தயக்கம் பற்றியும் (நிறைய காரணங்கள் உண்டு. ஆனால் முக்கியமானதாய் நான் நினைப்பது ஒரு எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நமது பிரம்மாண்டமான முன்முடிவு. இதுவே தேவையற்ற ஒப்பீடுகளால் நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்குள்ளும் தள்ளி விடுகிறது) – எது கவிதை என்பதில் ஏற்படும் குழப்பங்கள் பற்றியும் (கவிதை என்பதற்கு ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம்/ரசனை சார்ந்து சில விளக்கங்களை வைத்திருப்பர். அதனால் எது கவிதை எனத் தேட ஆரம்பித்தால் நிச்சயம் எழுதுவதற்கென நேரம் இருக்காது) – ஏன் என்ற கேள்விக்கு விடை கண்டறிவதில் உள்ள மனப்போக்கு பற்றியும் (விருப்பம் சார்ந்துதான் ஒரு துறையில் இயங்க ஆரம்பிப்போம். ஏன் என்ற கேள்விக்கான விடையை ஆரம்ப நிலையிலேயே தேட வேண்டிய அவசியமில்லை) பதிவு செய்திருந்தேன். அதிகமான முன் தயாரிப்புகள் இல்லாமல் பேசியதால் சொல்ல வந்த கருத்துக்களைச் சிறப்பான முறையில் என்னால் சொல்ல முடியாமல் போய்விட்டது.

💫நூல் அறிமுகத்தைத் தவிர்த்து படித்ததில் பிடித்ததைப் பகிர்வதற்கும், கவிதை எழுதி வாசிப்பதற்கும் மேடை தயாராக இருந்தது. இதுபோன்ற இலக்கியச் சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்…

💫ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் இத்தனைப் பேருக்கு என்னைப் பற்றியோ, என் நூலைப் பற்றியோ ஒரு சிறு அறிமுகம் கூடக் கிடைக்காமல் போயிருக்கும். இம்முறை நடந்த சந்திப்பில் எனது நூலை அறிமுகம் செய்ததற்கு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கும், கவிஞர் இரா. பூபாலன் அவர்களுக்கும் கவிஞர் க. அம்சப்ரியா அவர்களுக்கும் மிக்க நன்றி

💫எனது முதல் நூலான கனவின் துடுப்பை வெகுவாக சிலாகித்து அறிமுகம் செய்த கவிஞர் சுடர்விழி அவர்களுக்கு என் பெரும் நன்றியும் அன்பும்💜

💫காலையிலேயே இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தமைக்கு
மக்கள் வெளிச்சம் நாளிதழிற்கு நன்றி

image
image

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started