நூல் : தீ நுண்மிகளின் காலம்
ஆசிரியர் : இரா. பூபாலன்
பக்கம் : 64
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
கவிதைகள் எதைப் பற்றியதாக இருக்கும் என சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நூலின் தலைப்பிலேயே தெரிந்திருக்கும். கொரோனா காலக்கட்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை ஏற்படுத்தியுள்ளது. துன்பகரமான தருணங்கள், துன்பத்துக்கு இடையிலேயும் சில நெகிழ்வான தருணங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. வீட்டிற்குள் அடைபட்டிருந்த காலம், வேலை, வருமானம் பற்றிய கவலைகள், தனிமை, ஆன்லைன் வகுப்புகள், அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை, முகமூடிகளுடன் வெளிவந்து உலாவிய அனுபவங்கள் என A-Z நிகழ்வுகளை கவிதையாய் மாற்றியிருக்கிறார்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் நாம் உயிரோட்டம் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆம், வீடுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். உறவுகளைப் புதுப்பித்து இருக்கிறோம். வண்ண வண்ண பட்டங்களை பறக்க விட்டோம். பரமபதம், சீட்டுக்கட்டு விளையாடித் தீர்த்தோம். டல்கோனா காபி தயாரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினோம். இன்னும் பல. இதுவே நமது இயல்பு. இதுவே மனிதனின் இயல்பு. ஆனால் பரபரப்பான வாழ்க்கையையே நாம் இயல்பு எனக் கருதி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய விருப்பம் இது மட்டுமே. சில காலங்கள் காணாமல் போனது போல சில காயங்களும் காணாமல் போக வேண்டும்.