புத்தகம் : வாடிவாசல்
ஆசிரியர் : சி. சு. செல்லப்பா
பக்கங்கள் : 104
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பொங்கலின் போது ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பெரும் உற்சாகத்துடன் ஒரே ஒரு முறை நேரிலும் கண்டிருக்கிறேன். வெறும் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதால் ஐல்லிக்கட்டைப் பற்றிய மேம்போக்கான செய்திகள் மட்டுமே அறிவேன். தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டில் கூட ஏதேனும் அரசியல் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.
இப்புத்தகம் 50-களில் நடந்த ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகிறது. அதனால் பெரிய அளவில் இக்கதையுடன் ஒன்றிப் போக முடியவில்லை. ஜல்லிக்கட்டில் தகப்பனைக் கொன்ற காளையை, மகன் பிச்சி அடுத்து வரும் ஜல்லிக்கட்டில் வீழ்த்த நினைக்கிறான். அந்தக் காளையோ ஜமீன்தாருடையது. அதனால் சந்திக்கும் சிக்கல் என்ன? பிச்சி காளையை வீழ்த்தினானா இல்லையா? காளை என்ன ஆனது? என்பதே கதை.
சில பத்திகளை இரண்டு மூன்று முறை படிக்க வேண்டியதாயிருந்தது. சில உரையாடல்கள் சமயங்களில் மிகைப்படுத்தப்பட்டது போல தோன்றியது. இதுவே இப்புத்தகத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படாமல் போனதற்கு காரணம் என நினைக்கிறேன்.
Take away from this book:
நேர மேலாண்மையில் நான் எப்போதும் பின்தங்கியே இருக்கிறேன். நான் திட்டமிட்டபடி ஒருநாளும் நகர்வதில்லை. வாடிவாசலில் பிச்சி எல்லா காளைகளையும் அணையாமல் தேர்ந்தெடுத்த சில காளைகளை மட்டுமே அணைய முயற்சி செய்வான். அதுபோல தேவையற்றதைத் தவிர்த்து முதன்மையான பணிகளை முதலில் தேர்ந்தெடுத்து செயல்படுத்துதல் வேண்டும் என மூளை நினைவுபடுத்தியது. திட்டமிடுதல் பற்றியே பெரும்பாலும் நினைத்துக் கொண்டிருப்பதால் என்னவோ இப்படித் தோன்றியது என நினைக்கிறேன்.
ஓவியர் கே.எம். ஆதிமூலம் அவர்கள் வரைந்த கோட்டோவியங்கள் இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்றை வரைய முயற்சி செய்தேன். Not bad.
– சங்கமித்ரா