இத்தொடரில் இது கடைசிப் பதிவு. (முந்தைய பதிவுகளின் சிறு தொகுப்பாய்)
1) நீங்கள் முதல் முறை புத்தகம் வெளியிடப் போகிறீர்கள் என்றாலும் உங்களை மரியாதையுடன் நடத்தும் பதிப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.
2) பதிப்பகத்திற்குப் புத்தகத்தை அனுப்பி வைத்துவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். பல்வேறு காரணங்களால் மறுமொழி ஏதும் சொல்லாத பதிப்பகங்கள் நிறைய உள்ளன. உங்கள் நேரத்தை வீணடிக்காத பதிப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.
3) இது 21ஆம் நூற்றாண்டு. எனவே இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கும் பதிப்பகங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
4) புத்தகத்தை வெளியிட சில பதிப்பகங்கள் பணம் கேட்பார்கள். அந்தத் தொகை நியாயமானதாக இருக்கிறதா என யோசித்துக் கொள்ளுங்கள்.
5) நீங்கள் வெளியிட நினைக்கும் புத்தகத்தின் வகை (genre) அந்தப் பதிப்பகத்தின் மூலம் அதிக அளவில் வெளியிடப்படுகிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
6) தங்களது விருப்பத்திற்கு ஏற்ப புத்தகத்தை மாற்றி எழுதிக் கொள்ளலாம் என நினைக்கும் பதிப்பகங்கள் ஒன்றிரண்டு உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.
7) சரியான வாய்ப்பு என நினைக்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் அதனை நிராகரிக்கும் உரிமையும் உங்களுக்கு உண்டு.
பதிப்பகங்கள் குறித்து இதுவரை நான் எழுதியவை மிகக் குறைந்த அளவிலான செய்திகளே. இவை பேருதவியாக அமையப் போவதில்லை தான். ஆனாலும் இவை ஓரளவிற்காவது உங்களுக்குப் பயன்படும் என்று நம்புகிறேன். முந்தைய பதிவுகள் சிலவற்றில், இத்துறையைய் பற்றி அறிந்த சிலர் comment section-இல்(in FB) அவர்களது அபிப்பிராயங்களையும் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவலுக்கு முடிந்தால் அதனையும் சேர்த்து வாசியுங்கள்.
இனி self publishing (notion press போன்ற பதிப்பகங்களைக் குறிப்பிடவில்லை. அச்சில் இருந்து விற்பனை வரை நாமே அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் சுய வெளியீட்டினைப் பற்றிக் கூறுகிறேன்) மூலமாக புத்தகம் வெளியிட்ட அனுபவம் குறித்தும், அதிலிருந்து நான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றியும் தொடராக எழுதுவேன். இதுவரை இத்தொடரைப் படித்தமைக்கு மிக்க நன்றி.
– சங்கமித்ரா